ஒவ்வொரு வருடமும் புதிதா ஆரம்பிக்கும் போதும் மனதில் புதுதாக ஏதாவது ஒரு விடயத்தை கடைபிடிக்க அல்லது வளப்படுத்த என்ற எண்ணம் நம்மில் பல பேரிடம் பிறக்கும் இருந்தும் அதில் சில பேரால் மட்டும் அதில் வெற்றிகாண முடியும் மீதி இருக்கும் அனைவரும் ஜனவரியில் பாதியையும் பெப்ரவரியில் மீதியையும் தொலைத்திருப்பாங்க.. மனம் போல எண்ணங்கள் பெரிதாக இருந்தாலும் அதை வெற்றிகரமாக செயற்படுத்தும் ஆற்றலும்; அதுக்கான ஆர்வமும் இல்லாமல் இருப்பது இதை தொலைக்க முக்கியமான காரணம். அப்துல்கலாமின் “கனவு காணுங்கள்” எனும் வரிகளைத் தவறாக உணர்ந்து கொண்ட இளைஞர்கள் உணர வேண்டியது தூக்கத்தில் வருபவை அல்ல கனவுகள் நமைத் தூங்க விடாமற் செய்வதே கனவு… கனவுகள் மெய்ப்பட கொஞ்சம் புதிதாய் இந்த வருடத்திலாவது விடாமல் கடைபிடிக்க கூடிய சில தீர்மானங்கள் கீழே, படித்து பின்பற்றலாமே…
தேகத்தில் வலிமை கொள்
![2018ல் வெற்றிகரமாக பின்பற்றக் கூடிய சில தீர்மானங்கள் 1 வலிமை கொள்](https://dev2.uplist.lk/wp-content/uploads/2022/08/தேகத்தில்-வலிமை-கொள்-1024x458.jpg)
சிறு வயதில் எப்படி ‘அ’ இருந்து எழுத ஆரம்பிப்பது இன்றுவரை மறக்காமல் இருப்பது போல இலகுவான அடிப்படைகளில் இருந்து திட்டமிடுவது எவ்வளவு காலம் சென்றாலும் நம்முடன் நிலைத்திருக்கும் ஆற்றலை தந்துவிடும். அவ்வாறான ஒரு விடயம் உடற்பயிற்சி. தினமும் காலையில் குறைந்தது 15 நிமிட உடற்பயிற்சி நம்முள் எதிர்பாராத மாற்றங்களை கொண்டுவரும். அன்றைய நாளுக்கான வேலைகளை சுறுசுறுப்பாய் செய்யும் ஆற்றலைக் கொண்டுவரும். இருபது அடி தூரம் நடந்ததும் இளைப்பாற இடம் தேடவும் முப்பதடி தூரம் நடந்ததும் மூச்சு நின்றுவிடும் நிலையில் பலர் இன்று. யதார்தம் இதுவாக இருக்க, அதிலும் வாழ்க்கை தொடங்குமிடம் முப்பது வயதென்றிருக்க பலர் அதில் முதுமையை எட்டி விடுகின்றனர். தோள் பை கொண்ட ஆண்களிலும் பார்க்க தொப்பை கொண்ட ஆண்கள் விகிதாசாரத்தில் இன்று முன்னிலையில் இருப்பது உறுதி. உடற்பயிற்சி இதற்கான தீர்வாக இருக்கும். மனதை கட்டுபடுத்தி உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் உதவியாய் உடற்பயிற்சி நிலையங்களை (Gym) நாடலாம். உடல் கட்டுக்கோப்புடன் இருப்பது வெற்றிகரமாக சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமையும் வழங்கும்.
புத்துயிர் பெற சில புத்தகங்கள்
வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கின்றது, நல்ல புத்தகங்களை வாசிக்கும் ஆர்வம் பலரிடம் இருப்பதில்லை. புத்தாண்டில் புதிதாய் ஆரம்பிக்கக்கூடிய வழிமுறைகளில் சிறப்பான ஒன்று புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது. விஞ்ஞான ஆய்வுகளில் வாசிக்கும் பழக்கம் அதிகமுள்ளவர்களிடம் மேம்பட்ட நுண்ணறிவுத் திறன் விருத்தி அடைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பபடுகிறது. அவசரமாக முடிவெடுக்கும் பலரிற்கு இதன் மூலம் ஆழ்ந்து சிந்தித்து சிறப்பான முடிவெடுக்கும் ஆற்றல் பிறக்கும். புத்தகங்கள் எந்த வடிவிலும் இருக்கலாம், கதை, கட்டுரை, கவிதை என விருப்பத் தேர்வுகள் வேறுபடலாம்.
![2018ல் வெற்றிகரமாக பின்பற்றக் கூடிய சில தீர்மானங்கள் 2 புத்துயிர்-பெற-சில-புத்தகங்கள்](https://dev2.uplist.lk/wp-content/uploads/2022/08/புத்துயிர்-பெற-சில-புத்தகங்கள்-1024x458.jpg)
மொழி ஆர்வலர்கள் வேற்று மொழி நூல்களையும் வழக்கப்படுத்திப் பார்க்கலாம். இதன் முலம் சொற்களஞ்சியம் விருத்தி செய்யப்படும். பிறரிடம் பேச நினைக்கும் விடயங்களை தெளிவாகப் பேசும் திறன் வளரும். இதனையும் தாண்டி (Tension) என தலையைப் பிய்த்து திரியும் நமக்கு மனதை ஓர் புள்ளியில் ஒருநிலைப்படுத்தி விட நல்ல புத்தகங்களால் முடியும். எந்த துறையில் இருந்தாலும் அது சார்ந்த நூல்கள் பற்றிய அறிவு நம்மை பிறரிலும் பார்க்க புத்திசாலி எனும் மரியாதையை ஏற்படுத்தித்தரும். பெற்றோர்களிடம் இப் பழக்கம் உருவாகும் போது அது பிள்ளைகளிடம் இலகுவாகச் சென்றடையும். மாணவர்கள் பாடபுத்தகங்களை இலகுவாகப் புரிந்து கொள்ள இது ஓர் சிறந்த ஆரம்பமாக இருக்கும். வாசிக்கும் பழக்கமே இல்லாதவர்கள் தினமும் பத்திரிகை வாசிக்க பழகலாம் குறைந்தது அது வீட்டில் உணவைப் பொதி செய்யவதற்காகவது அமைவாக இருக்கலாமே. மேலும் கற்பனா சக்தி வளர்வதால் மேலும் இனிய கனவுகளை அடுத்த வருடத்திலிருந்து காணலாமே…
அதிகாலையில் துயிலெழு
அதிகாலையில் கண்விழிப்பவர்கள் தாமதமாக கண்விழிப்பவர்களை விட சுறுசுறுப்பானவர்களாகவும் ஆரோக்கியமானவர்களாகவும் அழாகன உடல் கட்டமைப்பையும் கொண்டவர்களாக இருக்க இரவில் அதிக நேரம் பொழுதைக்கழிப்பவர்கள் உடல் வலிமை குறைவாக இருப்பதுடன் உச்ச அளவில் மன அழுத்தத்திற்குள்ளாவதாகவும் ரோகாம்டன் பல்கலைக்கழக மாணவர்களால் செய்யப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் பலரால் இதைப் பின்பற்ற முடிவதில்லை. 19 தொடக்கம் 25 வயதானவர்களில் பலர் “அதிகாலை” என்பதைக் கண்டிருப்பதில்லை, என்னிடமே பலர் அது எப்படி சாத்தியம் என வாதிடுகின்றனர். உன்மை யாததெனிலில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு 6-8 மணிநேர நித்திரை போதுமாதாக இருக்க 19 தொடக்கம் 25 வரை வயதானவர்களுக்கு 7-9 மணிநேர நித்திரை அவசியமாகிறது.
![2018ல் வெற்றிகரமாக பின்பற்றக் கூடிய சில தீர்மானங்கள் 3 அதிகாலையில்-துயிலெழு](https://dev2.uplist.lk/wp-content/uploads/2022/08/அதிகாலையில்-துயிலெழு-1024x458.jpg)
எனவே நேரத்திற்கு நித்திரைக்கு செல்வதன் மூலம் அதிகாலையில் எழுவதற்கான வாய்ப்புக் கிடைக்கும். அதிகாலையில் எழுவதற்கு தூக்கத்திற்கு நேரத்திற்கு செல்வது, தொலைக்காட்சியை 10 மணிக்குப் பிறகு பார்ப்பதைத் தவிர்ப்பதும் கைபேசி பாவனையைக் குறைத்துக் கொள்வதும் வாய்ப்பாக அமையும். காதலிப்பவர்களுக்கு இது சவாலாக இருந்தாலும் முயற்சி செய்து புரியவைக்கலாம், வாழும் நாட்கள் நல்ல நித்திரை மூலம் நீட்டிக்கப்படுகின்றதே… நித்திரைக்கு செல்லும் முன் குறைந்தது ஒரு கோப்பைத் தண்ணீர் அருந்துவது நல்லது. வயிற்றை சமநிலையில் வைத்திருந்து அதிகாலையில் வைத்திருந்து நம்மை எழச் செய்ய உதவியாக இருக்கும். மேலும் நித்திரைக்குச் செல்லும் முன் அதிகாலையில் எழ வேண்டும், நாளைய நாளில் செய்ய வேண்டிய விடயங்களை நினைவில் கொண்டவாறு நித்திரைக்குச் செல்வதால் காலையில் எழும் போது அவற்றை சீராக செய்து முடிக்கக் கூடியவாறு இருக்கும். உணவுப் பழக்கமும் இதில் முக்கிய தாக்கத்தைச் செலுத்துகிறது, காலையில் நேரத்திற்கு எழ முடியாதவர்களால் காலை உணவைக் குறைவாகவே சாப்பிட முடியும், மதிய நேரத்தில் வேலை செய்பவர்களால் ஓரளவு சாப்பிட முடிந்தும் இரவில் அனைத்தையும் சேர்த்து வைத்து உண்பதன் விளைவாக உடல் ஆரோக்கியம் கெடுதலடைகிறது. அதிகாலையில் எழுவதன் மூலம் சீரான உடல் பழக்கதையும் பேண முடியும். குறிப்பாக மதிய உணவின் பின் கோப்பி போன்ற கபைன் (Caffine) கொண்ட உணவுப் பொருட்களை உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
குறைந்த செலவும் நிறைந்த சேமிப்பும்
சிறு துளி பெரு வெள்ளம், அன்றாட வாழ்வில் சேமிப்பு மிக முக்கியமானதொன்றாகும். நம்மில் பலர் செலவு செய்வதிலும் பார்க்க வீண் செலவு செய்வது அதிகம். அவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அதிக பணத்தை நம்மால் சேர்க்க முடியும். பணத்தை சேகரிக்க முதல் வழி செலவுகளுக்கான அறிக்ககையை சேகரிப்பது அதை வகைப்படுத்தி வைப்பதால் வரவு கணக்கினையும் எதில் அதிகபட்சமாக வீண்செலவு செய்கிறோம் என்பதையும் கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும். திடீர் என ஏற்படும் செலவுகளை எம்மால் திட்டமிட முடியாது போனாலும் மாதாந்த வரவு செலவினை முன்கூட்டியே எம்மால் திட்டமிட முடியும் எனவே அதற்கான திட்டமொன்றை வைத்திருப்பது நல்லது. பணத்தினை செலவு செய்வதற்கான திட்டமிருப்பது போல சேமிப்பதற்கான எண்ணமும் இருக்க வேண்டும். பணம் செலவு செய்வதை கட்டுப்படுத்த முடியாதவர்கள் நிலையான வைப்பில் (Fixed Deposit) பணத்தை சேகரிக்கலாம்.
![2018ல் வெற்றிகரமாக பின்பற்றக் கூடிய சில தீர்மானங்கள் 4 குறைந்த-செலவும்-நிறைந்த-சேமிப்பும்](https://dev2.uplist.lk/wp-content/uploads/2022/08/குறைந்த-செலவும்-நிறைந்த-சேமிப்பும்-1024x458.jpg)
பணம் சேகரிப்புகள் திடீர் சுகயீனங்கள், சுற்றுலாவுக்கான செலவுகள் என்பவற்றின் போது பெரும் துணையாக இருக்கும். மேலும் நீண்ட கால சேமிப்புகள் ஓய்வு பெறும் போதோ அல்லது பிள்ளைகளின் படிப்பு செலவு என்பவற்றின் பொது பயன்படும். வைப்புகளை சேமிக்கும் போது நம் வருமானத்தினைக் கருத்தில் கொண்டு பொருத்தமான முறையில் சேமிக்க வேண்டும். மாதாந்த வருமானம் பெறுபவர்கள் வங்கிகளில் தொடர்ச்சியாக குறித்த பெறுமதியை சேமிக்கும் வண்ணம் மாற்றி வைப்பதன் மூலம் அதனைச் சீராகப் பேண முடியும். இப்படியாக நம் கண் முன்னே பணம் சேமிக்கப்படுவதையும் பெருகுவதையும் காணலாமே…
திறன்களை வளம் செய், இல்லையேல் உருவாக்கு
ஆற்றலற்ற மனிதன் தோன்றுவதேயில்லை, ஒவ்வொரு மனிதனும் விலங்கிலிருந்து வேறுபட அறிவனைக் காட்டிலும் திறன் முக்கியமானதொன்றாக இருக்கிறது. இந்த உலகின் ஒவ்வோர் கோடி மனிதரிலும் நம் போல் ஒருவரைக் காண முடியாது, ஒவ்வொரு மனிதரும் தனித்துவமான திறமையுடன் இருப்பர். அந்தத் திறமையை வளர்த்துக் கொள்வதன் மூலம் நமக்கான அடையாளத்தை உருவாக்க முடியும். பாடும், ஆடும் திறமையுடையவர்கள் அதனை முறையாகக் கற்க ஆரம்பிக்கலாம். ஓரிடத்தில் ஓய்ந்து கிடப்பதை விட நமக்கான திறனை வளப்பதற்கும் மனதை புத்துணர்சியாக வைத்திருக்கவும் உதவி செய்யும். நீச்சல், வரைதல், தற்காப்புக் கலை பயிற்சி, இசைக் கருவிகளை இசைக்கப் பழகுதல் போன்றனவும் இதிலடங்கும். மேலதிகமாக வீட்டில் இருந்தவாறே கைவினைப் பொருட்களை செய்தலும் புதிதாக இருக்கும் அத் திறன் விருத்தியடையும் போது அதை விற்பனை செய்வதால் ஓரளவு பணம் திரட்டிக் கொள்ளவும் முடியும்.
![2018ல் வெற்றிகரமாக பின்பற்றக் கூடிய சில தீர்மானங்கள் 5 திறன்களை-வளம்-செய்-இல்லையேல்-உருவாக்கு](https://dev2.uplist.lk/wp-content/uploads/2022/08/திறன்களை-வளம்-செய்-இல்லையேல்-உருவாக்கு-1024x458.jpg)
எனவே பிறக்கின்ற புது வருடத்திலிருந்து ஏதாவது ஒரு புதிய விடயத்தைக் கற்க ஆரம்பிப்பது சிறந்த தெரிவாக இருக்கும். பரந்து விரிந்த இணையத் தளத்தில் கொட்டிக்கிடக்கும் விடயங்கள் ஏராளம் அதன் மூலம் வீட்டிலிருந்தே உங்களுக்கான திறனை விருத்தி செய்யலாம் ஆர்வமிருந்தால் இவ்வாறான பழக்கவழக்கங்கள் எளிமையாக தோன்றினாலும் பலரால் கடைபிடிக்க முடியாமல் போய்விடுகின்றன. இவற்றால் கிடைக்கும் பயன்களும் அதானால் ஏற்படும் மகிழ்ச்சியும் நிரந்தரமாய் நிலைத்திருக்க ஆரம்பத்தில் இவற்றைப் பழகும் போது ஏற்படும் கஷ்டங்கள் தற்காலிகமானவை என்பதை நினைவில் கொள்க. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இன்னும் கொஞ்சம் இனிமையாக….