காலிக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்துள்ளீர்களா?

நாம் எல்லோருமே விடுமுறை வந்துவிட்டால் மனதுக்கு மகிழ்வுதரும்  இயற்கையோடு இணைந்து அவ் விடுமுறையை கழிக்கவே விரும்புவோம் அல்லவா? அனைவருமே தமது குடும்பத்துடன் நீண்ட தூர பயணம் சென்று தமது விடுமுறையை கழிக்க விரும்புவதுண்டு. சிம்புவின் “அச்சம் என்பது மடமையடா” படம் பார்த்த பின்பு கையிலுள்ள மோட்டார் வாகனம் உங்களை நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று அழைக்கின்றதா? வாருங்கள்! இலங்கை எனும் சொர்க்கத்திற்கு.

இந்து சமுத்திரத்தின் முத்தான நம் இலங்கைத் தீவு பசுமை நிறைந்த இயற்கை அழகும், இயற்கை வளங்களும்  தன்னகத்தே கொண்டுள்ளது. இதமான காலநிலை, கனிவான உபசரிப்பு, இலகுவான மொழித் தொடர்பாடல்  முதலிய வரப்பிரசாதங்களும் இத் திருநாட்டில் காணப்படுகின்றன.


Srilankabeauty

இலங்கையின் தென் மாகாணத்தின் அழகு நிறைந்து வழியும்  கடலுக்கு  அருகாமையில் உள்ள ஒரு நகரமே காலி. ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தில் துறைமுகமாக  காணப்பட்ட இக்கரையோர பிரதேசத்தில் ஒல்லாந்தர் ஆட்சியின் சின்னமான  ஒல்லாந்துக் கோட்டை  உள்ளதை காணலாம். காலி நகரிலிருந்து 6KM தொலைவிலேயே “உனவட்டுன” கடற்கரை   உள்ளது. ஐரோப்பியர்களின் வரலாற்று எச்சங்களும், பாரம்பரியங்களுமே காலிக்கு சுற்றுலாபுரி என்கிற நிலையை தந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

ஒவ்வொரு சுற்றுலா தளத்திற்கும் வேறு வேறு பயணத்தை மேற்கொண்டு  அலையவேண்டிய தேவை இல்லை. பெரும்பாலான சுற்றுலா தளங்கள் காலிக்கோட்டையுடன் இணைந்திருப்பதால் சுலபமாக பார்வையிட முடியும். காலிக்கான பயணத்தை கொழும்பிலிருந்து ஒரு மணிநேரமாக அதிவேக நெடுஞ்சாலை வசதி மாற்றியுள்ளது. எனவே ஒரு நாளில் காலியின் அழகை ரசித்து வீடு திரும்ப இயலுமானதாக இருக்கும்.  தென்மேற்கு கரையோரமாக காலி நோக்கி பயணிக்க அண்ணளவாக 3 மணிநேரமாகும்.


Colombo-Galle-Hight-Way  

பல நவீன உல்லாச விடுதிகள் கொண்ட “ஹிக்கடுவை” கடற்கரை காலிக்கு அண்மையில் தான் உள்ளது. இங்குள்ள கடற்கரைகளில் கண்ணுக்கு மட்டுமன்றி உங்கள் நாவுக்கும் விருந்தளிக்கக்கூடிய  கடலுணவுகளை சுவைத்து மகிழலாம். இங்குள்ள  குளிர்ச்சியான  கடற்கரைக் காற்றை சுவாசித்தவாறு சுவையான உணவை ருசித்து உண்ணும் போது  உங்கள் வயிறும் மனதும் நிறைவடையும்.

அடிப்படையில் காலி நகரினை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று, புகையிரத நிலையம், பேரூந்து நிலையம், காலி சர்வதேச மைதானம் ஆகியவற்றை உள்ளடக்கி ஓய்வில்லாத நவீன நகரமாக ஓடிக்கொண்டிருக்கும். மற்றையது, இவை எவற்றிற்குமே சம்பந்தமில்லாமல், அமைதியாக பழைய ஒல்லாந்தரின் நகரத்தை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கும். இந்த அமைதியான நகரத்தை, வாகனங்களை ஓரம்கட்டி வைத்துவிட்டு, நடையிலேயே சுற்றி வந்துவிடலாம்.

காலிக் கோட்டை

காலிக்குள் உள்நுழைந்ததுமே நமக்கு தெரிவது, வானுயர்ந்து எழுந்து நிற்கும் கலங்கரை விளக்கமும், இன்றும் உறுதியாய் அமையப் பெற்றிருக்கும் காலிக் கோட்டையின் மதில் சுவர்களுமே! அன்றைய ஆங்கிலேயரின் வாழ்விடங்களை காப்பாற்றிக்கொள்ள 1588ம் ஆண்டில் முதன்முதலில் போர்த்துகேயரினால் இந்த கோட்டை அமைக்கபட்டது. ஆனாலும், அதன் இன்றைய வடிவத்தை உருவாக்கியதில் ஒல்லாந்தருக்கு பெரும் பங்குண்டு. இன்றும், காலிகோட்டையின் உள் அமைந்துள்ள கலைநயமிக்க சில வீடுகளுக்கு ஒல்லாந்து குடும்பங்கள் உரிமையாளராக உள்ளார்கள் என்பது இலங்கையின் மீதான வெளிநாட்டவரின் காதலுக்கு ஓர் சான்றாகும்.


Galle-Fort

இலங்கையில் சுனாமி அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மோசமான நகரங்களில் காலி நகரமும் ஒன்றாகும். இதன்போது, காலிக்கோட்டையும் பாதிப்புக்குள்ளானது. இன்றும், சுனாமியின் எச்சங்களை தாங்கியபடி, அதனையும் தாண்டி காலிக்கோட்டை எழுந்து நிற்பதானது, அன்றைய திறமையாளர்களின் திறனுக்கு ஓர் எடுத்துகாட்டாகும்.

காலி கோட்டையின் கடற்கரைக்கு அண்டிய மதில்சுவர்களில் நடந்து செல்கையில், கடலின் அழகை இரசிப்பது மட்டுமல்லாது, முக்குளிப்போர் எனப்படும் Diver களையும் காணக்கூடியதாக இருக்கும். காலியில் முக்குளிப்பதற்கு பெயர்போன கொடிப் பாறை (Flag Rock) பகுதியில் இவர்களை காணக்கூடியதாக இருக்கும். அழகில் ஆபத்தும் உள்ளது என்பதுபோல, இவர்கள் சாகசம் அழகானது என்றபோதிலும், உயிரை பறிக்கும் ஆபத்து நிறைந்ததாகும்.

அருங்காட்சியங்கள்

காலி நோக்கிப் பயணிப்பவர்கள், இலங்கையினதும் காலியினதும் தொன்மையை அறிந்துகொள்ளுவதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்களாயின், அவர்கள் தவறவிடக்கூடாத சில முக்கியமான இலங்கையின் அருங்காட்சியகங்கள் இங்குண்டு.


Galle-National-Museum

காலி தேசிய அருங்காட்சியகம் – ஒல்லாந்த அரசதரப்பினரால், அவர்களுக்கென கட்டப்பட்ட கட்டிடத்தில் இன்றும் காலியின் ஆதிகாலம்தொட்டு, ஆங்கிலேயரின் ஆளுகைக்குட்பட்ட அனைத்து வரலாறு சார்ந்த பொருட்களையும் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.

காலி தேசிய அருங்காட்சியகம்

தேசிய அருங்காட்சியகத்தை பார்வையிட்டுவிட்டு வெளியே வரும் வழியில், நன்கு வளர்ந்த ஈரப்பலாக்காய் (Breadfruit Tree) மரத்தினை நீங்கள் கடந்து செல்லகூடும். ஆனால், இது சாதாரணமான மரமொன்று அல்ல. ஒல்லாந்து நாட்டவரால் இலங்கைக்கு முதன்முதலில் கொண்டுவரப்பட்ட 300 வருடங்கள் பழமையான ஈரப்பலாக்காய் மரமே அதுவாகும்.

காலி கடல்சார் அருங்காட்சியகம் – இலங்கையின் இயற்கைத் துறைமுகங்களில் ஒன்று காலியிலும் அமைந்துள்ளது. அப்படியானால், கடலுடனும், கடல்சார் விடயங்களிலும் காலி எவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது என்பதை சொல்வதற்கில்லை. 1992ம்ஆண்டு மக்கள் பாவனைக்காக ஒல்லாந்தரின் கட்டிடத்தில் ஆரம்பிக்கபட்ட இந்த அருங்காட்சியகமும் சுனாமி அனர்த்தத்தில் சேதமடைந்தது. ஆனாலும், 2004ல் UNESCO வின் உதவியுடனும், 2010ம் ஆண்டு நெதர்லாந்து அரசின் 177 மில்லியன் உதவியுடனும், புத்தாக்கம் பெற்று மீண்டும் மக்கள் பாவனைக்கு திறந்துவிடபட்டுள்ளது.


National-Railway-Museum

தேசிய கடல்சார் அருங்காட்சியகம் (roadslesstravelledsrilanka.com)

காலி மாளிகை அருங்காட்சியகம் (Galle Mansion Museum) – இந்த தனிநபர் அருங்காட்சியகம் காலியின் பழமையான குடிமனையில் அமைந்துள்ளதுடன், இங்கு, காலியின் பண்டைய வாழ்க்கை முறைமையை பிரதிபலிக்கின்ற அனைத்துவகையான உபகரணங்களையும் கொண்டதாக அமைந்துள்ளது. பழமையான மட்பாண்டங்கள் முதல், நம் முன்னோர்கள் பயன்படுத்திய உபகரணங்கள் என அனைத்துமே உள்ளடக்கபட்டிருக்கிறது. கவ்வார் (Gaffar) என்கிற பெரியவரினால், நடாத்தபடுகின்ற இந்த தனிநபர் அருங்காட்சியகம் விற்பனை நிலையமாகவும்  அமைந்துள்ளது.

ஆலயங்கள்

காலி வரலாற்றில் ஆங்கிலேயர்களின் பாதிப்பு இருப்பது போல, அவர்களது கலைதாக்கம் கொண்ட தேவாலயங்களுக்கும் பஞ்சமில்லை. REFORMED CHURCH, ALL SAINTS’ CHURCH என்பன அவற்றுள் முக்கியத்துவம் பெறுகின்ற 150 வருடங்களுக்கும் மேலான வரலாற்ரை கொண்ட தேவாலயங்களாக உள்ளன. அதுபோல, வாணிப வாயிலாக இலங்கைக்குள் உள்நுழைந்த இஸ்லாமியர்களின் வரலாற்றை சொல்லுகின்ற 300 வருடங்கள் பழமையான மீரான் பள்ளிவாசலும் (MEERAN MOSQUE ) இங்குண்டு.


Galle-Allsaint-Church

Dutch Reformed Church Galle (tropicalceylon.com)

இவ்வாறு, தொன்மையான கட்டிடக்கலையையும், வரலாற்றை சொல்லும் அருங்காட்சியகங்களையும், மத தளங்களையும் இரசித்துகொண்டு காலிக்கோட்டைக்குள் நடைபயிலும் உங்களுக்கு பயணத்தின் நடுவிலோ அல்லது முடிவிலோ பசி வயிற்றை பதம் பார்ப்பின், அவற்றை வழமைபோல அல்லாமல், விதவிதமான உணவுகளுடன் தீர்த்துக்கொள்ள பல்வேறு வகையான உணவகங்கள் காலியில் உள்ளன.

உணவகங்கள்

அண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கும் உல்லாச பயணிகளின் வருகையினால், ஒல்லாந்து குடும்பங்கள் தமக்கு சொந்தமான வீடுகளை நவீனதரமிக்க உணவகங்களாக மாற்றியமைத்து, வெளிநாட்டின் விதவிதமான உணவுவகைகளை பரிமாறி வருகிறார்கள். காலிக்கோட்டைக்குள் அமைந்துள்ள உணவகங்களில் விலையும், தரமும் அதிகமாக இருப்பதுடன், புதிய காலி நகரத்தில் நம்மவர்களின் வழமையான உணவுகளை வேவ்வேறு விலைகளில் பெற்றுக்கொள்ள முடியும்.


உணவகங்கள்

காலிக்கோட்டையில் கொழும்பில் உள்ள டச்சு வைத்தியசாலை என்று அழைக்கபடுகின்ற இந்நாளின் உணவுக்கட்டிடத் தொகுதிபோல, டச்சு வைத்தியசாலை விதவிதமான உணவுதொகுதிகளை கொண்டு அமைந்திருக்கிறது.

இதனை தவிரவும்,

Fort Rotti Restaurant –  ரொட்டியை அடிப்படையாக கொண்ட விதவிதமான உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

Chambers – மொராக்கன் மற்றும் இத்தாலிய உணவுவகைகளை இங்கே ருசிக்க கூடியதாக இருக்கும்.

Poonies-Kitchen – புதிய மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான Salads உட்பட ஏனைய உணவுகளையும் இங்கே ருசிக்கலாம்.

Poonies Kitchen (unakanda.com)

The Original Rocket Burger – Burger பிரியர்களுக்கு பொருத்தமான இடங்களில் ஒன்று. அதுபோல, கொழும்பின் உரிமைத்துவ உணவங்களான (Franchise Restaurant)  Buger King, McDonald போன்ற உணவகங்களுக்கு மாற்றீடாக இதனை ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம்.


Poonies-Kitchen-Galle

இவை எல்லாம், வழமையாக இலங்கையின் சுற்றுலா தளங்களில் உள்ள உணவகங்களுக்கு மாற்றீடாக பயணங்களின்போது ருசிபார்க்க கூடிய சில உணவகங்கள் ஆகும்.

காலிக் கோட்டையிலிருந்து சூரிய அஸ்தமனம் (67.media.tumblr.com)

இவ்வாறு, காலிநகரின் சகலபகுதிகளையும் இரசித்து கொண்டே, நாள் நிறைவில் வீடு திரும்பும் எவருமே, மாலைவேளையில் காலி கடற்கரையோரங்களிலோ அல்லது காலிக்கோட்டையின் கடற்கரையோர மதில்களிலிருந்தோ சூரிய அஸ்தமன அழகை இரசிக்காமல் திரும்புவதில்லை.

காலி பற்றிய உங்களின் கருத்துக்களையும் பதிவிடவும்….
Leave your comment
Comment
Name
Email