வீட்டுத்தோட்டம் செய்ய நீங்கள் தயாரா??

இன்றைய காலகட்டத்தில் நகரத்தில் வாழும் மக்கள் ஒரு பரப்பு காணி வாங்கவே கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டும்.இந்த நிலையில் வீட்டுத்தோட்டம் செய்வது வெறும் கனவாகவே உள்ளது. இன்றைய நவீன யுகத்தில், பரவியிருக்கும் அசுரத்தனமான நோய்களிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டியது  மிக அவசியமானதொன்றாகும்.  500 சதுர அடி பரப்பில் கட்டப்படும் வீட்டில் கூட அழகான தோட்டத்தை அமைக்க முடியும் தென்னை நார் கழிவு, நுண்ணுட்டச்சத்து, இயற்கை உரம் உள்ளிட்ட இடு பொருட்களை இணைத்து தேவையான பயிர்களின் உரங்களை போட்டு, இதற்கென பிரத்யேக பையில் போட்டு காய்கறி உள்ளிட்ட பயிர்களை உற்பத்தி செய்ய முடியும் .

கத்தரிக்காய், தக்காளி, வென்டைக்காய், மிளகாய், முள்ளங்கி உள்ளிட்ட அனைத்து காய்கறிகள், வெந்தயக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை உள்ளிட்ட அனைத்து கீரை வகைகள், பிரண்டை, கற்பூரவள்ளி, பார்வதி இழை உள்ளிட்ட அனைத்து மூலிகைச்செடிகள், ரோஜா, மல்லிகை உள்ளிட்ட அனைத்து பூ வகைகள் என தங்களுக்கு தேவையான அனைத்தும் வீட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளலாம். ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனி பைகள் வேண்டும்.


Garden

இந்த முறைக்கு சூரிய ஒளி வெளிச்சம் கிடைத்தால் மட்டும் போதும். நீர், உரம் போன்றவை குறைவாக இருந்தால் போதும். வீட்டில் சூரிய வெளிச்சம் படும் பகுதி, வீட்டு மொட்டை மாடி, வீடுகளுக்கு அருகிலோ என தங்களுக்கு தகுந்த இடத்தில் காய்கறிகளை உற்பத்தி செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் வீட்டுப் பெண்கள் காய்கறிகள் வாங்க அலைய வேண்டியதில்லை. பணவிரயம், அலைச்சல் போன்றவை ஏற்படாது.உங்கள் இடத்தில் வீட்டுத்தோட்டம் அமைத்து சுகாதாரமான காய் கறிகளை பயிரிட்டு அதனை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ முடியும்.

இயற்கையை விட்டு விலக விலக நம்மில் பலருக்கும் அதன் மீது பிரியம் அதிகரித்துவருகிறது. அதன் வெளிப்பாடுதான் இன்றைக்கு அதிகரித்துவரும் செடி வளர்ப்பு என்னும் விவசாய ஆசை. நெருக்கடியான அடுக்குமாடி வீடுகளிலும் தனி வீடுகளிலும் மக்கள் தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப இடத்தில் மண் தொட்டிகளில் செடி வளர்க்கிறார்கள்.


Greenhouse

காய்கறிகள் நமது அன்றாட வாழ்விற்கு மிகவும் முக்கியமானதாகும். அதுவும் குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் அவசியம். இவை உணவின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உணவை ருசியாக்குகின்றன. ஊட்டச்சத்து வல்லுனர்களின் பரிந்துரைப்படி, ஒரு வயது வந்த நபர், சீரான திட்ட உணவிற்கு ஒரு நாளைக்கு 85 கிராம் பழங்களையும் 300 கிராம் காய்கறிகளையும் உண்ண வேண்டும். ஆனால் தற்போதைய காய்கறி உற்பத்தியை கணக்கிட்டு பார்க்கும் பொழுது ஒரு நபர் ஒரு நாளுக்கு 120 கிராம் காய்கறிகளையே பெற முடிகிறது.

மிகக் குறைவான இடத்தில் சாகுபடி செய்யப்படுவதால், மிக எளிதான முறையில் நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடிகிறது. மேலும் பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இதனால் காய்கறிகளில் நச்சு இரசாயணங்கள் படிவதை தவிர்க்க முடிகிறது.நம் வீட்டில் தேங்கி நிற்கும்  சமயலறை மற்றும் குளியலறை கழிவு நீரை பயன்படுத்தி உற்பத்தி செய்யலாம். இதன் மூலம், உபயோகமில்லாத தண்ணீர் தேங்கி நிற்பதையும், சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் தடுக்க முடிகிறது. பயனுள்ள வகையில் காய்கறி உற்பத்தியை மேற்கொள்ளமுடிகிறது.


வீட்டுத்தோட்டம்

அவரை,பயறு போன்ற நேரடி விதைப்பு பயிர்களை 30 செமீ இடைவெளி விட்டு நடவு செய்தல் வேண்டும்.புதினா,கொத்தமல்லி,சின்ன வெங்காயம் போன்றவற்றை வரப்பின் ஓரத்தில் நடுதல் நன்று.முழுமையாக புடுங்கப்படும் அல்லது அறுவடை செய்யப்படும் செடிகளான சிறுகீரை போன்றவற்றை 20 பகுதி மணல் 1 பகுதி விதை என்ற விகிதத்தில் கலந்து விதைக்க வேண்டும். பருவ தாவரங்களை ஏனைய பயிர்களினது நிழல் படியாதவாறும், ஊட்டச்சத்திற்கு போட்டி ஏற்படாதவாறும் தோட்டத்தின் மூலையில் பயிரிடல் சிறந்தது.  குறுகிய கால பயிர்களான கொத்தமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, போன்றவற்றை தோட்டத்தின் நடுவில் உள்ள நடைபாதை மற்றும் ஏனைய நடைபாதையின் அருகிலும் நட வேண்டும். தக்காளி, கத்தரி, மிளகாய் போன்றவற்றை நாற்றங்கால் படுக்கைகளில் அல்லது தொட்டிகளில் ஒரு மாதத்திற்கு முன்பே விதைக்க வேண்டும்.

விதைப்பு முடிந்து மண்ணை மூடியவுடன், எறும்பு வருவதை தடுக்க வேப்பம் புண்ணாக்கை தூவவேண்டும். விதைத்து  40-45 நாட்கள் கழித்து கத்தரி, மிளகாய், சிறு வெங்காயம் ஆகியவற்றையும், 30 நாட்கள் கழித்து தக்காளியையும் நாற்றங்களில் இருந்து எடுத்து நடவு செய்ய வேண்டும். தக்காளி, கத்தரி, மிளகாய் ஆகியவற்றிற்கு 30-45CM என்ற இடைவெளியிலும் சின்ன வெங்காயம் 10CM இடைவெளியிலும் நட வேண்டும். நடவு செய்தவுடன் முதல் தண்ணீரும் நட்ட மூன்றாம் நாள் மறுதண்ணீரும் பாய்ச்ச வேண்டும். நாற்றுகளுக்கு இளம் பருவங்களில் இரு நாட்களுக்கு ஒரு முறையும், பிற்பருவங்களில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.


Home-Gardening

ஒரு வருடத்திற்கு, வீட்டுச்செலவுக்கு தேவைப்படும் காய்கறிகளை தொடர்ச்சியாக உற்பத்தி செய்வதே வீட்டு காய்கறி தோட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை எடுத்து கொண்டு,  அளவுக்கு அதிகமாக உள்ளவற்றை பண்டம் பரிமாற்றம் செய்யவோ விற்கவோ செய்யலாம். சில சமயங்களில், வருமானம் ஈட்டுவதே காய்கறி தோட்டத்தின் முதன்மையான நோக்கம் ஆகிவிடுகிறது.

காய்கறி மற்றும் வருமானம் ஆகிய இரண்டு ஆதாயங்களும் வீட்டு  காய்கறி தோட்டத்தில் கிடைக்கிறது.எந்த சமயத்திலும் ஒரு நல்ல ஊட்டச்சத்தின் அவசியத்தை மனதில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஊட்டச்சத்தும், வருவாய் ஈட்டுவதும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையனவாகும். வீட்டில் பராமரிக்கப்படும் கால்நடைக்கு தேவையான தீவனமும் இதன் மூலம் கிடைக்கின்றன.

அனைவரும் வீட்டுத்தோட்டம் அமைத்து ஆரோக்கியமாக வாழ்வோமாக!
Leave your comment
Comment
Name
Email